சென்னை: சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர் நல சங்கத்தின் தலைவர் தியாகராஜன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த மார்ச் மாதம்23 ம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கையை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு நேற்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே, தடை விதிக்க முடியாது. இந்த வழக்கில் நாளை (இன்று) மத்திய அரசு பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.