×

கொல்லிமலை அருகே மாடு மேய்க்க சென்ற பெண் கொடூர கொலை!: அலங்கோலமான நிலையில் சடலம் மீட்கப்பட்டதால் அதிர்ச்சி!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே மாடு மேய்க்க சென்ற பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வாயில் துணி வைத்து அடைப்பு, உடலில் ரத்த காயங்கள் என பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதற்கான அடையாளங்களை கைப்பற்றியுள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொல்லிமலை, குண்டலினாடு ஊராட்சி, கீரைக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி நடேசன். இவரது மனைவி தீபா. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான இவர், நேற்று முன்தினம் மாடு மேய்ந்துவிட்டு வருவதாக கூறிவிட்டு கீரைக்காடு வனப்பகுதிக்கு சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த நடேசன் பல இடங்களில் மனைவியை தேடியுள்ளார். ஆனாலும் தீபா கிடைக்கவில்லை.

இந்நிலையில் கீரைக்காடு வனப்பகுதி அருகே பெண் ஒருவர் உடலில் துணிகள் இன்றி, வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக இன்று காலை தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற நடேசன் இறந்துகிடப்பது தனது மனைவி தான் என்பதை உறுதி செய்தார். தீபா உடலில் பல இடங்களில் ரத்த காயங்களும், கற்களால் தாக்கியதற்கான அடையாளங்களும் காணப்பட்டன. இதை தொடர்ந்து, உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வனப்பகுதியில் பெண் தனியாக இருப்பதை நோட்டமிட்ட யாராவது அவரை பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags : murder ,Kollimalai , Brutal murder of a woman who went to herd cattle near Kollimalai !: Shock as the body was recovered in a chaotic condition!
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...