சென்னை:தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று திரு.வி.க. நகர் மண்டலத்தில் கோபாலபுரம் சென்னை நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்புப்பணி மேற்கொள்ளும் 70 களப்பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார். பின்பு அங்குள்ள நகர்புற நலவாழ்வு மையத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் சென்னையில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
ஒவ்வொரு தெருக்களுக்கும் களப்பணியாளர்களை நியமித்து வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தொற்று கண்டறிவதை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கொரோனா தொற்றால் முதலிடத்தில் இருந்த திரு.வி.க. நகர் தற்போது 7வது இடத்திற்கு வந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பங்கேற்கும் வகையில் பாரத் நெட் டெண்டர் மாற்றி அமைக்கப்படும். இன்னும் ஒருவார காலத்தில் பாரத் நெட் டெண்டர் குறித்த தகவல்களை முதல்வர் அறிவிப்பார். மத்திய அரசு, சில செயலிகளுக்கு தடைவித்துள்ளது. இதுபோல் பப்ஜி செயலியை தடை செய்ய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.