* கண்டிப்பாக லேப்டாப் எடுத்து வர வேண்டும்
* பள்ளி கல்வித்துறை உத்தரவு
சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட இருக்கிறது. புத்தகம் வாங்க வரும் பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் லேப்டாப்களை எடுத்து வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகள் எப்ேபாது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 14 மற்றும் 15ம் தேதிகளில் புதிய பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து 14 மற்றும் 15ம் தேதிகளில் பாடப்புத்தகங்களை பெற்றுக் கொள்ள வர வேண்டும். மேலும், பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், வரும் போது தங்கள் லேப்டாப்களையும் கொண்டு வர வேண்டும். அவற்றில் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்துக் கொள்ளும் சாப்ட்வேர் பொருத்தப்படும்.
மீண்டும் குழப்பம் ஆரம்பம்
பாடபுத்தகம் வினியோகம் 14 மற்றும் 15ம் தேதிகளில் தொடங்க உள்ள நிலையில், தற்போது பிளஸ் 2 வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும் புத்தகம் வழங்கப்பட உள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், பிளஸ் 2 செல்லும் மாணவர்களை அழைத்துள்ளது ஏன் என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அந்த மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டால், அவர்கள் பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் கொடுத்த புத்தகங்களை திரும்ப பெறுவார்களா அல்லது தேர்ச்சி என்பதை மறைமுகமாக சொல்கிறார்களா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.