×

பாய்லர் வெடி விபத்து நெய்வேலி என்எல்சிக்கு ரூ.5 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 13 தொழிலாளர்கள் பலியானது தொடர்பாக, ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் சிலம்பரசன், பத்மநாபன், அருண்குமார், ராமநாதன், நாகராஜ், வெங்கடேசபெருமாள் ஆகிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சிலர் சிகிச்சை பலனின்றி மருத்துவனைமனையில் இறந்தனர். இந்த விபத்தில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாய தலைவர் ஆதர்ஷ், ‘‘பலியானவர்களின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.30 லட்சம் வழங்க வேண்டும். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க வேண்டும். இதற்காக என்எல்சி நிர்வாகம் அபராதமாக ரூ.5 கோடியை மாவட்ட கலெக்டரிடம் செலுத்த வேண்டும். அடுத்த 2 வாரத்தில் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Neyveli NLC ,National Green Tribunal ,National Boat Tribunal , Boiler accident, Neyveli NLC, Rs 5 crore fine, National Green Tribunal
× RELATED கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை:...