சென்னை: சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நோய் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாம்பலம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் உட்பட 40 போலீசாருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், சென்னையில் பணியாற்றும் உதவி ஆணையருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல், இருந்ததால் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
* வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஒரு குற்றவாளியை கைது செய்து விசாரணை செய்த வடபழனி காவல் நிலைய 2 எஸ்ஐக்கள் மற்றும் 4 போலீசார் என 15 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
* பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள், ஒரு காவலர் ஆகியோருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனாலும் காவல் நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு மேலும் 4 காவலர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால், சக காவலர்கள் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். சென்னை மாநகர காவல் துறையில் நேற்று முன்தினம் வரை 434 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கூடுதல் கமிஷனர், 2 துணை கமிஷனர்கள் உட்பட 147 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.