×

தொடர்ந்து 4 வாரங்களுக்கு புதிதாக கொரோனா தொற்று இல்லையென்றால் மட்டுமே, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் : திட்டங்களை கடுமையாக்கும் மத்திய அரசு

புதுடெல்லி:கொரோனா வைரஸ் பெரிய அளவில் பரவி விடாமல் தடுப்பதற்கு தீவிரமான திட்டங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109- ஐ எட்டி விட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தில் உள்ளது. வெளிநாடு செல்லாத இந்தியர்களுக்கு பரவும் மூன்றாவது கட்டத்தை அது அடையவில்லை.ஊரடங்கு பரவலை தடுப்பதற்கு நல்வாய்ப்பாக இருப்பதால் அடுத்து வரும் சில நாட்களில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நோய்ப் பரவல் மூன்றாவது கட்டத்தை எட்டாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் அடங்கிய 20 பக்க கொண்ட  ஆவணம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அது சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டு உள்ளது.H1N1 எனப்படும் பன்றிக் காய்ச்சலோடு ஒப்பிடும்போது கொரோனா தொற்று அதிகம்பேரை பாதித்திருந்தாலும், பரவிய பகுதிகள் இரண்டிற்கும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், எனவே கொரோனா நாடு முழுவதும் சீராகப் பரவ வாய்ப்பில்லை என்றும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு விதமான அணுகுமுறைகளை கையாள வேண்டும் என்பதையே இது காட்டுவதாகவும் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த காப்பு மண்டலங்களை உருவாக்குவது, குறிப்பிட்ட பகுதிகளை ஒரு மாத காலத்திற்கு மூடி சீல்வைப்பது உள்ளிட்ட திட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

1.மூடி சீல் வைக்கப்படும் பகுதிகளில் இருந்து யாரும் வெளியேறவோ உள்ளே செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

2.கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப்படாது.

3.பொதுப்போக்குவரத்தும் இருக்காது. அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

4.தொடர்ந்து 4 வாரங்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தவில்லை எனில் மட்டுமே, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

5.கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, சந்தேகத்திற்கிடமானவர்கள் அனைவரும் தனிமை வார்டில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

6.லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் மைதானங்களிலும், மிதமான அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவமனைகளிலும், தீவிர அறிகுறிகள் இருப்பவர்கள் உயர்சிறப்பு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுவார்கள்.

7.பரிசோதனையில் இரண்டு முறை நெகடிவ் என வந்தவர்கள் மட்டுமே வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

8.மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் எப்போதும் மூன்றடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.     


Tags : government , Corona, Virus, Central Government, India, Doctors, Nurses
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...