×

பிளாக்குல ஓடிட்டிருக்கிறத... நேரடியாவே விக்கலாமே!: நடிகர் ரிஷி கபூர் டிவீட்

ஊரடங்கு அமலில் இருந்தாலும் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது சரியான நடவடிக்கைதான். எனினும் லைசென்ஸ் பெற்ற மதுக்கடைகளை தினசரி மாலை சில மணிநேரமாவது திறந்து வைக்க அரசு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்படி நான் கூறுவதால் என்னை தவறாக நினைக்க வேண்டாம். ஊரடங்கால் வீட்டில் அடைந்து கிடப்பவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

எந்நேரமும் கொரோனா, டாக்டர்கள் பற்றிய செய்தியையே பார்த்துக் கொண்டிருக்கும் அவர்கள் அந்த அயர்ச்சியில் இருந்து சற்றேனும் விடுபட மது உதவக்கூடும். மதுக்கடைகள் திறந்திருக்காவிட்டாலும் கூட இப்போதும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதை கவனத்தில் கொண்டாவது மதுக்கடைகளை மாலை சில மணிநேரம் மட்டும் திறக்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Rishi Kapoor , Actor Rishi Kapoor
× RELATED எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன்...