திருவொற்றியூர்: புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோயில் தெருவை சேர்ந்த தனியார் வங்கி அலுவலர் நரேந்திரன் (28) என்பவரும், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவரும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 14ம் தேதி இவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்தது. இந்நிலையில், காதலி வேறு ஒருவருடன் செல்ேபானில் நீண்ட நேரம் பேசியதை நரேந்திரன் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காதலி, தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார். மண்டபம், அழைப்பிதழ் என அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில், திருமணம் நின்று போனதால் இதுபற்றி நரேந்திரன் பெற்றோர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார், இரு தரப்பினரிடம் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நரேந்திரன் வழக்கறிஞர்கள் சிலருடன் நேற்று முன்தினம் காவல் நிலையம் சென்று, தனது புகாரை துரிதமாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது, வழக்கறிஞர்களை பெண் ஆய்வாளர் மரியாதை குறைவாக பேசியதாக தெரிகிறது. இதை கண்டித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து நேற்று காலையும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், வழக்கறிஞர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.