×

பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு ஏற்பாடுகள் மும்முரம்: துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் அனுப்பிவைப்பு: ‘டாப் சீட்’ இணைப்பு பணி தீவிரம்

நெல்லை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வருகிற மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. இதுபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி நிறைவடைகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27ல் தொடங்கி ஏப்ரல் 13 வரை நடக்கிறது. பிளஸ்2 தேர்வுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. கடந்த வாரம் விடைத்தாள் மற்றும் மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய டாப் சீட் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து டாப் சீட்டை விடைத்தாளுடன் இணைத்து தையல் இயந்திரத்தில் தைக்கும் பணி நடக்கிறது. பாடங்களுக்கு ஏற்ப விடைத்தாள் பக்க எண்ணிக்கை அமைக்கப்படுகிறது. இதற்கிடையே பிளஸ்1 மற்றும் பிளஸ்2 தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி முடிந்ததால் அவை சென்னையில் இருந்து துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் முழுவதும் மூடப்பட்ட லாரிகளில் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு ஒரு சில பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு தேவையான பழைய பாடத்திட்ட வினாக்களும், தற்போது பிளஸ்1 பயிலும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட வினாக்களும் தனித்தனியாக தயாரிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களுக்கு வந்து சேரும் வினாத்தாள்கள் முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு கல்வி மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு (நோடல் சென்டர்கள்) அனுப்பி வைக்கப்படுகின்றன.  வினாத்தாள் பாதுகாக்கப்படும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சிசிடிவி கேமராக்கள் மூலமும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Elections , Plus 1, Plus 2 General Election, Gun Police Security, Questionnaire
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு