சென்னை: மூன்றாண்டு சாதனைகளின் குறும்படம் மற்றும் காலப்பேழை புத்தகம் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்கு சான்று” என்ற மூன்றாண்டு சாதனை மலர்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), முதலமைச்சர் சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரைகள், சட்டப் பேரவையில் 110வது விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகள் இடம்பெற்ற புத்தகத்தை தமிழக முதல்வர் நேற்று வெளியிட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, மாவட்டம் வாரியாக தொகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனை மலர்கள், முதலமைச்சர் ஆற்றிய உரைகளில் இருந்து தொகுக்கப்பட்ட முத்தான கருத்துரைகள், மூன்றாண்டு சாதனை குறும்படங்களின் குறுந்தகட்டினை வெளியிட, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பெற்றுக் கொண்டார். மேலும், முதலமைச்சர், காலப்பேழை புத்தகத்தினை வெளியிட தலைமைச் செயலாளர் சண்முகம், பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னதாக சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் 3 ஆண்டு சாதனையை பாராட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து ெகாடுத்து வாழ்த்தினர்.