பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர் குமரவேல் (26). இவரும், நெய்வேலி திடீர்குப்பதை சேர்ந்த ராஜேஸ்வரி(25) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுககு இரு குழந்தைகள் உள்ளனர். காடாம்புலியூரில் வசித்து வந்த இவர்கள் கடந்த 4மாதங்களுக்கு முன் பண்ருட்டி அன்வர்ஷா நகர் 4வது தெருவில் வாடகை வீட்டில் குடியேறினர். நேற்று முன்தினம் திடீரென ராஜேஸ்வரி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக ராஜேஸ்வரியின் தாயார் சுசிலா புகாரின்படி பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணையில் இறங்கினர். அதில், கணவனே மனைவியை கொன்றது தெரியவந்தது. பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த குமரவேலை போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் தெரிவித்ததாவது: ராஜேஸ்வரி தனது தாயாருடன் சேர்ந்து அப்பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். மேலும், டிக்டாக்கில் பாடியும், பல ஆண்களுடன் சேர்ந்து நடித்த காட்சிகளையும் பதிவிட்டுள்ளார். இதனால், அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை குமரவேல் கண்டித்தபோதும் அவர் அதனை கேட்காததால் குமரவேல் மனைவி ராஜேஸ்வரியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார். ராஜேஸ்வரியின் டிக்டாக் பதிவில் சுமார் 300க்கும் மேற்பட்ட பதிவுகள் இருந்துள்ளது. டிக்டாக் மூலம் ஏராளமான இளைஞர்களுடன் ராஜேஸ்வரிக்கு ஏற்பட்ட தொடர்பே அவரது கொலைக்கு காரணமாக அமைந்து விட்டது என்றனர்.