×

சென்னையில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் 3வது நாளாக பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்

சென்னை: சென்னையில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் 3வது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், போலீஸ் டிஜிபி உள்பட உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் போராட்டத்தை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம் மற்றும் பேரணி  நடத்தி வருகிறார்கள். தாம்பரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.போலீசார் தாக்கியதை கண்டித்தும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேலூரில் போராட்டம்:
குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து வேலூர் அண்ணா சாலையில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபேற்ற போராட்டத்தில் பெண்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவையில்  பேரணி:
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பொதுமக்கள் பேரணி நடைபெற்று வருகிறது. காரமடை சாலை முதல் ஒடங்கரை வரை நடைபெறும் பேரணியில் அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்றுள்ளது.

ராமநாதபுரத்தில் போராட்டம்:
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக ராமநாதபுரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். சந்தைக்கடை திடலில் நடைபெறும் போராட்டத்தில் என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிராகவும் முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் போராட்டம்:
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் 6000 க்கும் மேற்பட்டோர் கண்டனப் பேரணி நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் 6000 பேர் பேரணியில் பங்கேற்றுள்ளனர். விஎஸ்டி பள்ளிவாசல் முதல் ஜின்னா திடல் வரை ஆயிரக்கணக்கானவர்கள் கண்டனப் பேரணி நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சூரில் போராட்டம்:
குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய பெண்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கம் எழுப்பியுள்ளனர்.

போராட்டம் தொடரும்: இஸ்லாமிய கூட்டமைப்பு
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று இஸ்லாமிய கூட்டமைப்பு கூறியுள்ளது. நல்ல முடிவாக அறிவிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாக இஸ்லாமிய கூட்டமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வெண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ஜெயக்குமாருடன் - இஸ்லாமியர்கள் சந்திப்பு:
சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருடன் வண்ணாரப்பேட்டையில் போராடி வரும் இஸ்லாமியர்கள் சந்தித்து வருகின்றனர். ராயபுரம் சட்டமன்ற உறுப்பினரான ஜெயக்குமார் தங்களை சந்திக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். போராட்டக்குழுவை சேர்ந்த 25 பிரநிதிகள் அமைச்சரை சந்தித்துப் பேசினர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 3 வது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதை அடுத்து போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Tamil Nadu ,Islamists ,protest ,places ,Muslim ,Chennai , Madras, police beard, Tamil Nadu, Islam, citizenship law, struggle
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...