சென்னை: பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் செல்வம். இவருக்கு சம்பளம் நிலுவையில் இருந்துள்ளது. தனக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத்தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகை கேட்டு நந்தனத்தில் உள்ள சம்பள கணக்கு அலுவலகத்தில் செல்வம் கடந்த 2008ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பணியில் இருந்த கணக்காளர் புருஷோத்தமன், ‘இந்த தொகையை அனுமதிக்க வேண்டும் என்றால், 5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும்’’ என்று கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசாரின் அறிவுரைப்படி செல்வம், லஞ்சப்பணம் 500ஐ கொடுத்துள்ளார். அப்போது போலீசார் புருஷோத்தமனை கைது செய்தனர். வழக்கு விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் நடந்தது வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட புருஷோத்தமனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.