×

முண்டகக்கண்ணியம்மன் கோயில் பறக்கும் ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் தேன் கூடு

சென்னை: முண்டகக்கண்ணியம்மன் கோயில் பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள தேன் கூட்டினால் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது.  சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள மயிலாப்பூர் முண்டக்கண்ணியம்மன் கோயில் பறக்கும் ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையம் அருகில் சிலேட்டர்புரம், நாட்டான் தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ரயில் நிலையம் எதிரில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேற்கண்ட பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் ரயில் நிலையம் அருகில் உள்ள தெரு வழியாக தான் சென்று வருகின்றனர்.

இந்த தெரு அருகில் உள்ள ரயில் நிலையத்தின் சுவரில் தேன் கூடு ஒன்று பல நாட்களாக உள்ளது. இதன் மீது அவ்வப்போது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி எறிகின்றனர். இதனால், தேனீக்கள் பறந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களை சூழ்ந்து கொண்டு கடிப்பதால் தப்பி முடியாமல் அவதிப்படுகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வாலிபரை சூழ்ந்த தேனீக்கள் அவரை கடித்துள்ளது. இதிலிருந்து தப்ப முடியாமல் அவர் தவித்துள்ளார். அருகில் இருந்தவர்களும் தங்களையும் தாக்கி விடுமோ என்று அஞ்சி அந்த வாலிபரை காப்பாற்ற முடியாமல் ஒதுங்கி நின்றுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் அந்த வாலிபர் தேனீக்கள் கூட்டத்தில் இருந்து தப்பி வந்தார்.

மேலும், இது தொடர்பாக மாநகராட்சியில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை தேனீக்கள் அகற்றப்படவில்லை. ரயில் நிலையம் சுவரில் தேனீக்கள் இருப்பதால், ரயில்வே அதிகாரிகள் தான் பொறுப்பு என்று அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால், யாரிடம் புகார் தருவது என தெரியாமல் அப்பகுதி மக்கள் விழிபிதுங்கி நின்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து தேன் கூட்டை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள், ரயில் பயணிகள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : Mundagakkanniyam Temple Temple Honeycomb ,travelers ,Flying Train Station ,Mundagakanniyamman Temple Beehive , Mundaka Kanniyamman Temple, Flying Station, Honeycomb
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை