சென்னை: தமிழகத்தை 2018 நவம்பர் 16ம் தேதி தாக்கிய ‘கஜா’ புயலின்போது தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையின் நகலை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளர் திருப்புகழ் முதல்வர் எடப்பாடியிடம் நேற்று வழங்கினார்.அந்த அறிக்கையில், கஜா புயலை முன்னிட்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள், அதற்கான அரசு, அரசு துறை சார்ந்தோர் மற்றும் சமூக ஆர்வலர்களின் பணிகள், சிறந்த நடவடிக்கைகள் மற்றும் இந்த பணிகள் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களால் எதிர்வரும் காலங்களில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் ஆகிய தலைப்புகளில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் மத்திய அரசுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியின்போது, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.