புதுடெல்லி: நாகலாந்து மாநிலத்தில், ‘மிஸ் கொஹிமா’ என்ற அழகி போட்டி 1989ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான போட்டி தலைநகர் கொஹிமாவில் கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், 12 பெண்கள் பங்கேற்றனர். இதில் கிரியெனுவோ லீஜிட்சு என்ற அழகி, மிஸ் கொஹிமா’ பட்டம் வென்றார். விகானுவோ சாச்சு என்ற அழகி 2ம் இடத்தை பிடித்தார். இந்த போட்டியின் கேள்வி பதிலுக்கான சுற்றில், ‘பிரதமர் மோடி உங்களை பேச அழைத்தால், அவரிடம் என்ன கூறுவீர்கள்?’ என சாச்சுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சற்றும் தாமதிக்காமல், ‘`பிரதமர் அவர்களே... மாடுகளை விட பெண்கள் மீது அதிக அக்கறை செலுத்துங்கள் என கூறுவேன்.’’
என்று பதிலளித்தார். இதை கேட்டு நடுவர்களும், பார்வையாளர்களும் பலமாக சிரித்தனர். இந்த வீடியோ கடந்த 14ம் தேதி சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. அது வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பசு பாதுகாப்பு, பசு வதை தடுப்பு என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை குறிப்பிட்டே, சாச்சு இந்த பதிலை அளித்துள்ளார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.