ஸ்ரீநகர்: சட்டீஸ்கரை சேர்ந்த தொழிலாளி ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வரும் தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெற்கு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் கையெறி குண்டு தாக்குதலில் 14 பேர் காயமடைந்தனர். இதேபோல் கடந்த வாரம் ஸ்ரீநகரில் உள்ள சந்தை ஒன்றில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 பேர் காயமடைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக சட்டீஸ்கரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் நேற்று தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பழல்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அங்கு இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.