புனே: புனேயில் ‘அகில இந்திய புரொபசனல் காங்கிரஸ்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சசிதரூர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:பிரதமர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர் நமது நாட்டின் பிரதிநிதியாக அங்கு இருப்பதால் அவருக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும். ஆனால் அவர் இந்தியாவில் இருக்கும்போது அவரை கேள்வி கேட்க நமக்கு உரிமை உள்ளது. இந்தி, இந்துயிசம் மற்றும் இந்துஸ்தான் ஆகிய பாஜ.வின் கொள்கைகள் நமது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவை. நாட்டில் மும்மொழி கொள்கைதான் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட்டின் சில பகுதிகளில் மக்களை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அவை இந்துயிசம் மற்றும் ராமரை அவமதிப்பது போலாகும்.
கேரளாவில் (பல்வேறு வகுப்பினரிடையே) எந்த வேறுபாடும் கிடையாது. ஆனால் மகாராஷ்டிராவில் மட்டும் ஏன் அப்படி நடக்கிறது? மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜ் மகாராஜ் ஆட்சியிலும்கூட பல்வேறு வகுப்பினர் இருந்தனர். ஆனால் மற்றவர்களை மதிக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் அவர் அறிவுரை வழங்கினார். பாஜ.வின் இந்துயிசம் ஒரு “அரசியல் கொள்கை” ஆகும். அதற்கும் உண்மையான இந்துயிசத்துக்கும் சம்பந்தம் கிடையாது என்றார்.