திருவொற்றியூர்: மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் நேற்று பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியில் மின் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்த மின்வாரிய ஊழியர் முருகன் (36) என்பவர், மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி, சீரமைப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், முருகன் மயங்கி டிரான்ஸ்பார்மரிலேயே அந்தரத்தில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், முருகனை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், மணலியில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி முருகனை மீட்டு கீழே கொண்டு வந்தனர். அப்போது, அவர் இறந்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த மாதவரம் பால்பண்ணை போலீசார், முருகன் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து, அப்பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் முருகன் மீது எப்படி மின்சாரம் பாய்ந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.