×

கந்துவட்டி கொடுமையால் பெண் சாவு: விஷம் குடித்து உயிரை மாய்த்தார்

களக்காடு: களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் வேதநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மும்பையில் வசித்து வருகிறார். இவரது மனைவி காந்திமதி (48). காந்திமதி தனது மகன்கள் ரோபின் (26) மூபின் (24) ஆகியோருடன் வேதநாயகபுரத்தில் வசித்து வந்தார். கூலி தொழில் செய்து வந்தார். இவரது மகன்கள் கட்டிட தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காந்திமதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவர் மருத்துவ சிகிச்சை பெற அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் கந்துவட்டிக்கு பணம் கடனாக வாங்கியிருந்தார். இதற்கு வாரம்தோறும் வட்டி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும் கந்துவட்டி காரர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு காந்திமதிக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவரை அவதூறாகவும் பேசியுள்ளனர்.

இதனிடையே கடந்த 17ம் தேதி மாலை அவரது வீட்டிற்கு சென்ற கந்துவட்டிக்காரர்கள் மீண்டும் அவதூறாக பேசியதுடன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த காந்திமதி விஷம் குடித்தார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். கந்துவட்டி கொடுமையால் பெண் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து களக்காடு இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kalakkad , Kalakkad, poison
× RELATED களக்காட்டில் வாலிபரின் வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு