×

தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என அந்நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைத்தள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் கட்டுப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகிறது. பேஸ்புக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் ஆனால் இறுதி உத்தரவு எதையும் பிறப்பிக்க கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர ஒரு தளம் அமைத்து கொடுத்துவிட்டு, அதில் போடப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உலக அளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இங்கு இந்தியாவில் ஒரு சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான கருத்துக்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், காட்சி ஊடகங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் அமைப்பு இருப்பதை போல சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த அமைப்பு ஏதெனும் இருக்கிறதா? எனவும் நீதிபதிகள் அரசிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் சமூக வலைத்தளங்களை கண்காணிக்கவும் தவறான தகவல்களை கண்டறியவும் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாக தெரிவித்தார். தற்போது அந்த சட்டத்தின் இறுதி முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனம் அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதை போல, வாட்ஸ்அப் நிறுவனம் வழங்குவதில்லை தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags : companies ,Icort , Misinformation, social networking, corporations, high court, opinion
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...