×

கலெக்டர், டி.ஆர்.ஓ, ஆர்.டி.ஓ வேலைக்கு ஆட்கள் தேவை...புதுக்கோட்டை மாவட்டத்தை அலறவிட்ட போஸ்டரால் பரபரப்பு

கறம்பக்குடி: கலெக்டர், டிஆர்ஓ வேலைக்கு ஆள் தேவை என கறம்பக்குடி தாலுக்கா பகுதி முழுவதும் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால்  பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதி முழுவதும் கருத்தாய்வு குழு என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், மதுரை உயர் நீதிமன்றம் வழி காட்டுதல்படி,  கறம்பக்குடி தாலுகாவில் உள்ள  குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள வருவாய் வட்ட புல எண் 244-ல் உள்ள பாசன குளமான வெட்டு குளத்தை எப்பாடுபட்டாவது மத்திய புலனாய்வு பிரிவு மூலமாவது கண்டுபிடித்து  ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்றி மக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதிகளின்கீழ், பணிபுரிய உண்மையான அரசு பணியாளர்கள் தேவை.

காலிப்பணியிடங்கள் ஆக மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) , கோட்டாட்சியர் (ஆர்டிஓ), வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகள் எனவும் அதற்கு தகுதியாக பொது அறிவு, சுயமரியாதை ,  தன்னொழுக்கம் ஆகிய தேவையான தகுதிகள் வேண்டும் என்றும், விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 10.9.2019. விண்ணப்பங்கள் தபாலிலோ அல்லது மின்அஞ்சல் முகவரி மூலமாகவோ அனுப்பலாம்.   இந்த நேர்முக  தேர்விற்கு அமைச்சர் , ஆளும் கட்சி சார்பில் சிபாரிசு முற்றிலும் ஏற்று கொள்ளப்படாது என அச்சிடப்பட்டு கறம்பக்குடி பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப் பட்டுள்ளது.  இந்த போஸ்டரை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.  

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது: கறம்பக்குடி அருகே குலந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள கூத்தாலம்மன் கோயில் அருகே 10 ஏக்கரில் உள்ள வெட்டுகுளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதுசம்பந்தமாக கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் யாரோ இது போன்று போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளனர். ஒட்டியது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.வேலைக்கு ஆள் தேவை என கறம்பக்குடி பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் கறம்பக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Collector, TRO, RTO need people to work ... Pudukkottai
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்