×

விளை நிலங்களில் பெட்ரோல் குழாய் பதிக்கும் திட்டம் குறித்து தகவல் அறியும் சட்டத்தில் விவரம் கேட்டு ஒரே நேரத்தில் 500 விவசாயிகள் மனு: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின் வழியாக கோவை இருகூரிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவனகோந்தி வரை பெட்ரோல், டீசல் குழாய் பதிக்கும் திட்டம் குறித்து, தகவல் அறியும் சட்டத்தில் விவசாய நிலங்கள் பற்றிய விவரம் கேட்டு, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனித்தனியாக மனு அளித்தனர். கோவை மாவட்டம், இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனகோந்தி வரை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் சார்பில் பெட்ரோல், டீசல் ஆகியவை குழாய் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்கப்படவுள்ளது. இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி வழியாக கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு, மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான பணிகளுக்காக புஷ்பா என்ற அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இத்திட்டம் எந்ததெந்த மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக செல்லும் என நிலங்களில் சர்வே எண், கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவு உள்ளிட்டவைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராமர்கூடல், சின்னம்பள்ளி, பெரும்பாலை, அரகாசனஅள்ளி, மாக்கனூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள், நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர்.

பின்னர், சமூக ஆர்வலர் பியூஸ் மானூஸ் தலைமையில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தனித்தனியாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அதிகாரியிடம் 10 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டி, தகவல் அறியும் சட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தால், இருகூர் முதல் தேவனகோந்தி வரை பெட்ரோலிய குழாய் பதிப்பு ெதாடர்பான பணிகள் தொடர்பான அனைத்து கோப்புகளையும் பார்வையிட, சரியான நேரத்தை குறிப்பிட்டு ஒதுக்குமாறு கேட்டுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், ‘தகவல் அறியும் சட்டத்தில் எந்தெந்த விவசாயிகளின் நிலத்தின் வழியாக இத்திட்டம் செல்கிறது என்பதை கேட்டு மனு செய்துள்ளோம். எங்கள் விவசாய நிலத்தின் வழியாக கொண்டு செல்லாமல், மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்,’ என்றனர். ஒரேநாளில் 500க்கும்மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Residential Lands, Petrol Pipeline, 500 Farmers Petition, Dharmapuri Collector's Office
× RELATED நாடாளுமன்ற ஊழியர்கள் மேலும் 300 பேருக்கு கொரோனா