சென்னை: இந்தியாவின் முதல் கோனா மின்சார காரை முதலமைச்சர் பழனிசாமி அறிமுகம் செய்தார். சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுசூழலுக்கு மாசில்லாத வகையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கார் நிறுவனம் 10 லட்சம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டம்
ஹூண்டாய் கார் நிறுவனம் முதன்முதலாக மின்சார கார் தயாரிப்பை சென்னையில் தொடங்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி ரூ.2,000 கோடியை முதலீடு செய்து 10 லட்சம் இ-கார் எனப்படும் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் திட்டத்தை வகுத்தது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தப்படி ஹூண்டாய் நிறுவனம் பேட்டரி கார்களை தயாரித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் திட்டத்திற்காக ஹூண்டாய் நிறுவனம் 7,000 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேட்டரி கார்களின் சிறப்பு அம்சங்கள்!!..
*இந்த பேட்டரி காரில் தற்போது பயன்படுத்தும் கார்களை போன்று அனைத்து வசதிகளும் உள்ளன.
*இந்த பேட்டரி கார்களை 7 மணி நேரம் தொடர்ந்து சார்ஜ் செய்தால் 452 கி.மீ. வரை ஓடும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
*வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாரம் என்றால் சார்ஜ் ஆக 19 மணி நேரமாகும். fast charging mode ல் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்தில் காரில் சார்ஜ் ஏற்ற முடியும்.
*கார் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான வசதிக்காக சார்ஜிங் ஸ்டேசன் அமைக்க இந்திய ஆயில் நிறுவனத்துடன் ஹூண்டாய் கார் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
*சென்னையில் உற்பத்தியாகும் இந்த கார்களுக்கு கோனா எஸ்யுவி என பெயரிடப்பட்டுள்ளது.
*ரூ. 30 லட்சம் மதிப்புள்ள இந்த எலெக்ட்ரிக் கார் 9.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும்.
*ஓட்டுனருடன் சேர்த்து காரில் 5 பேர் பயணிக்க முடியும்.
பேட்டரி காரில் முதல்வர் பழனிசாமி பயணம்
இந்நிலையில் சென்னை ஸ்ரீபெரம்புதூர் ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள பேட்டரி கார்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் பேட்டரி காரை அறிமுகம் செய்து வைத்து அதில் முதல்வர் பழனிசாமி பயணம் செய்தார்.இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடுத்தரப் பிரிவு மக்கள் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார கார்கள் இன்று முதல் சந்தைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வாங்குபவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி சலுகை அறிவிப்பு
இதனிடையே கடந்த ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி சலுகை அறிவிக்கப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கும் எலக்ட்ரிக் கார்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய்யப்படும் எனவும் அரசு அளிக்கும் வரிச் சலுகை காரணமாக வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் கார் பக்கமே ஆர்வம் காட்டப்போகிறார்கள் எனவும் கருதப்படுகிறது.