×

பணம் கொடுத்தால் பதிவு தானாக நடக்கும்: விஜயேந்திரன், சதுப்பு நில ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு போட்ட வழக்கறிஞர்

சமீபகாலமாக பதிவுத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகிறது. பதிவுத்துறை என்பது அரசுக்கு வருமானத்தை தேடித்தரக்கூடிய முக்கியமான துறை. அரசுக்கு வருவாய் வருகிறதோ இல்லையோ, அடிப்படை பணியாளர்களில் இருந்து மேல்மட்டம் வரை ஊழல் பரவி கிடக்கிறது. சாதாரணமாக ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றால் திருமண பதிவாக இருந்தாலும் சரி, உயில் பத்திரம் பதிவு செய்வதாக இருந்தாலும் சரி. அந்த ஆவணம் நல்ல முறையில் இருந்தாலும் பணம் கொடுத்தால் தான் சார்பதிவாளர் பத்திரப் பதிவு செய்கிறன்றனர். அப்படி பணம் வாங்குவதற்கு காரணமாக மேலதிகாரிகளுக்கு மாதம், மாதம் கட்டாயம் பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், மேலதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் துறை மேலிடத்துக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது மிகவும் மோசமான, லஞ்ச ஊழல் புரையோடிப்போயிருக்கும் நிலையை எடுத்து காட்டுகிறது. பதிவுத்துறையில் தற்போது பொது மாறுதல் நடக்கிறது. இதில், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பணியிடமாற்றம் செய்ய, உதாரணமாக, திருப்பூரில் இருந்து கன்னியாகுமரி செல்ல வேண்டுமென்றால் ₹50 லட்சம் வரை கேட்கின்றனர். அதே போன்று பெரிய நகரங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ₹60 லட்சம், ₹1 கோடி என கொடுக்கின்றனர். பணம் கொடுத்தால் தான் பணியிட மாறுதல் என்று வரும் போது, அவர் அந்த சார்பதிவாளர் ₹5 கோடி வரை சம்பாதிக்கத் தான் பார்ப்பார். அதனால், பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம் அந்த சார்பதிவாளர்கள் பணம் கேட்டு வாங்குகின்றனர். அவர்கள் அரசு நிலம், நீர் நிலைகள் என்று எல்லாம் பார்ப்பதில்லை. பணம் கொடுத்தால் எந்த இடமாக இருந்தாலும் பதிவு செய்து கொடுத்து விடுகின்றனர்.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரிஜினல் சர்வே எண் 657. இந்த சதுப்பு நிலம் ஒரிஜினல் பரப்பளவு 6 ஆயிரம் எக்டேர் (15 ஆயிரம் ஏக்கர்).ஆனால், இப்போது, அதன் பரப்பு சுருங்கி 600 எக்டேர் (1,500) என்று சொல்கின்றனர்.சர்வே எண்  650 என்ற எண்ணிற்கு கீழ் சப் (துணை) சர்வே எண் போட்டு பத்திரம் பதிவு செய்துள்ளனர். சதுப்பு நிலம் அமைந்துள்ள பகுதி சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கீழ் வருகிறது. அந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் தவறான ஆவணத்தை வைத்து பல தனியார் கம்பெனிகளுக்கு பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்த சதுப்பு நிலத்தில் தனியார் மருத்துவமனை, ஐடி பார்க், கல்லூரி என அனைத்து தரப்பினருக்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், சாதாரண மக்கள் வசிக்கும் பகுதிகளை ஆக்கிரமிப்புகளாக காட்டப்படுகிறது. மேட்டுக்குப்பம், காமாட்சி நகர், காயிதே மில்லத் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக காட்டி வருகின்றனர். இது எவ்வளவு ெகாடுமையான விஷயம்?
அதே போன்று கிழக்கு கடற்கரை சாலையில் பக்கிங்காம் கால்வாய் பேக் வாட்டர் வரும் பகுதியான 282 சர்வே எண்ணில் ஒரு கோயிலுக்கு பட்டா போட்டு பதிவு செய்து கொடுத்துள்ளனர். தனிநபர்கள் தங்களது பெயரில் 282/1,282/2 என்ற சர்வே எண் முழுவதும் பட்டா மாற்றம் செய்து, அந்த இடத்தை தங்களது பெயருக்கு மாற்றி கொண்டனர்.

இதனால், பக்கிங்காம் கால்வாயில் இருந்து கடலுக்கு தண்ணீர் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்று நீர் நிலைகள், வரத்து கால்வாய்கள் செல்லும் பகுதிகளை பத்திரம் பதிவதை தடுக்க அந்த இடத்தை பதிவு செய்ய முடியாத வகையில் ‘தடை செய்யப்பட்ட பகுதி’  என்ற பெயரில் மாற்ற வேண்டும். இப்படி பதிவு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தினால் மட்டுமே குறைந்தபட்சமாக இது போன்ற நிலங்களை வைத்து மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்க முடியும். இது போன்று பல தகிடுதத்தங்கள் நடந்தேறி வருகின்றனர். அவர்கள் அரசு நிலம், நீர் நிலைகள் என்று எல்லாம் பார்ப்பதில்லை. பணம் கொடுத்தால் எந்த இடமாக இருந்தாலும் பதிவு செய்து கொடுத்து விடுகின்றனர்.

Tags : Registration, done ,automatically ,paid, Wijeyendran, Advocate
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...