×

காதலியை சேர்த்து வைக்க கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆசாமியை கொன்று கடலில் சடலம் வீச்சு: 6 பேர் கைது ,..பெண் வக்கீலுக்கு வலை

வேளச்சேரி: காதலியை சேர்த்து வைப்பதற்காக கொடுத்த 5 லட்சம் பணத்தை திருப்பி கேட்ட ஆசாமியை பெண் வக்கீல் கொலை செய்து சடலத்தை கடலில் வீசினார். இதுதொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண் வக்கீலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.   சென்னை அடையாறு, இந்திரா நகர் முதல் அவென்யூவை சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ் (50). திருமணம் ஆகாமல் சித்திகளுடன் வசித்தார். கடந்த ஜூன் 21ம் தேதி சுரேஷ் பரத்வாஜ் மாயமானார்.
புகாரின்பேரில் அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் பரத்வாஜை தேடி வந்தனர். மாயமான அன்று சுரேஷ் செல்போனை வீட்டு கார் டிரைவரிடம் கொடுத்து சென்றுள்ளார்.  டிரைவரிடம் போலீசார் விசாரித்தபோது அடையாறை சேர்ந்த வக்கீல் பிரீத்தி வீட்டுக்கு சுரேஷ் சென்றது தெரிந்தது. பிரீத்தியிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரது வீட்டு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அங்கு ஒரு மணி நேரம் இருந்துவிட்டு ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.

ஆட்டோ எண்ணை வைத்து  டிரைவரிடம் விசாரித்தபோது சுரேஷை காசிமேடு பகுதியில் விட்டதாக கூறினார். இதற்கிடையே போலீசார் ப்ரீத்தியின் செல்போனை ஆய்வு செய்தபோது காசிமேட்டை சேர்ந்த பிரகாஷ் (40) என்கிற குடும்பி பிரகாஷ் என்பவருடன் பேசி வந்தது தெரிந்தது. எனவே அவரை போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர்.    விசாரணையில் சுரேஷ் வீட்டில் வேலை செய்த சித்ரா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். அவரை அடைய சிறுக சிறுக 4 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். ஒரு நாள் வேலைக்கார பெண்ணிடம் சுரேஷ் தவறாக நடக்க முயன்றதால் அவர் வேலையைவிட்டு நின்றுள்ளார். சுரேஷ் கொடுத்த கடனை சித்ராவிடம் திருப்பி கேட்டபோது தர மறுத்ததால் வக்கீல் ப்ரீத்தியிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு ப்ரீத்தி வேலைக்காரி சித்ராவை அவருடன் சேர்த்து வைப்பதாக கூறி ₹65 லட்சம் பெற்றுள்ளார். சித்ராவை ப்ரீத்தி சேர்த்து வைக்காததால் அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

இதனால் பிரீத்தி கடந்த ஜூன் 21ம் தேதி அவரை கொல்ல பிரகாஷுடன் சேர்ந்து திட்டம் தீட்டி சுரேஷிடம் சித்ராவை சம்மதிக்க வைத்துள்ளதாகவும் செல்போனை வைத்துவிட்டு தனியாக வரவழைத்து காசிமேட்டில் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் 7 பேரும் சேர்ந்து சுரேஷுடன் படகில் 8 கிமீ தூரம் கடலுக்குள் சென்றுள்ளனர். பின்னர், அவரை அடித்து கொன்று சடலத்தை கடலில் வீசிவிட்டு வந்தது தெரிந்தது. எனவே போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் காசிமேடு சேர்ந்த சுரேஷ் (40), மனோகர் (45), சந்துரு (28), ராஜா (34), சதீஷ் (35) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான பெண் வக்கீல் ப்ரீத்தி மற்றும் சுரேஷ் பரத்வாஜின் சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Girlfriend, murder, corpse, 6 people arrested, female lawyer
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...