×

புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமல்ல: மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதில்

புதுடெல்லி: புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமல்ல என்று, காங்கி எம்.பி.யின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமா பதில் தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதல்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்., 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களின் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, ஆதில் என்ற தீவிரவாதி 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன் வந்த காரை, சிஆர்பிஎப் வீரர்களின் வாகனத்தில் மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தீவிரவாத தாக்குதலுக்கு பல்வேறு நாட்டின் தலைவர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ள பாகிஸ்தானை சர்வதேசத்தின் துணையுடன் அனைத்து முனைகளிலும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

எம்.பி. கேள்வி..

புல்வாமா தாக்குதல் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் எம்.பி. சையத் நாசர் உசேன் கேள்வியெழுப்பி இருந்தார். அதாவது, புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமா? ஆமாம் எனில் அதற்கான காரணங்கள் என்ன? அவ்வாறு இல்லையெனில், 300 கிலோ அளவுக்கு வெடி மருந்துகளை கொண்ட வாகனம், நெடுஞ்சாலைக்குள் எவ்வாறு நுழைந்தது? உளவுத்துறையானது இத்தகைய தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்று எச்சரிக்க தவறிவிட்டதா? என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

எழுத்தப்பூர்வ பதில்

இந்த நிலையில், எம்.பி. சையத் நாசர் உசேன் கேட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் கிருஷ்ணா ரெட்டி தாக்கல் செய்துள்ள இந்த பதிலில், புல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. அவரது கேள்விக்கு இல்லை என்ற ஒரு வார்த்தையை மட்டுமே உளவுத்துறை பதிலாக தெரிவித்துள்ளது. மேலும், காஷ்மீர் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எல்லைக்கு அப்பால் இருந்து உதவியும் ஆதரவும் கிடைக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.

அவர்களுக்கு எதிராக ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. புல்வாமா தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் இதுவரை புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பின்னிருந்து சதி செய்தவர்கள் யார்? தற்கொலைப்படையாக செயல்பட்டது யார்? மற்றும் தீவிரவாத தாக்குதலுக்கு வாகனத்தை கொடுத்து உதவியது யார்? என்ற விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Pulwama attack, Intel Agencies, home ministry, Lok Sabha
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...