×

ராமநாதபுரத்தில் பரபரப்பு அம்மா வாட்டர் விற்ற பணம் லட்சக்கணக்கில் மோசடி: வங்கியில் கட்டாமல் சுருட்டிய கேஷியர்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அம்மா வாட்டர் பாட்டில் விற்பனையில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஓட்டுநர் பயிற்சி மையத்தில் வாட்டர் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அரசு விரைவு பஸ்கள் மூலம் தமிழகத்திலுள்ள 250க்கும் அதிகமான பஸ் நிலையங்களுக்கு அம்மா வாட்டர்  பாட்டில் அனுப்பி வைக்கப்படுகிறது. ராமநாதபுரம் பஸ் நிலையத்திற்கு தினமும் 700 பாட்டில் வருகிறது. ஓய்வு பெற்ற ஊழியர் சண்முகவேல் என்பவர் மூலம் தண்ணீர் பாட்டில் விற்பனை நடக்கிறது. ஒரு பாட்டில் விலை ₹10 என விற்பனை  செய்யப்படுகிறது.

தினமும் விற்பனையாகும் தண்ணீர் பாட்டில்களுக்கான பணத்தை சேல்ஸ்மேன் சண்முகவேல், டிப்போவில் கேஷியரான பட்டினம்காத்தானை சேர்ந்த ராஜாத்தி (35) என்பவரிடம் செலுத்தி அதற்கான ரசீதில் கையெழுத்தும் பெற்றுள்ளார்.  ராமநாதபுரம் இந்தியன் வங்கியில் பஸ் டிக்கெட் வசூல் பணத்தை செலுத்தும் போது, அம்மா வாட்டர் பாட்டில் விற்பனை பணத்தை செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான சலானை அதற்கென பராமரிக்கப்படும் பதிவேட்டில் ஒட்டி  வைத்து பாதுகாத்து வரவேண்டும்.
அம்மா வாட்டர் பாட்டில் விற்பனை செய்த பணத்தை கடந்த பல மாதங்களாக முறையாக வங்கியில் கட்டாமல் லட்சக்கணக்கில் கேஷியர் கையாடல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கியில் பணம் செலுத்தியது போல் சலான் எழுதி  டூப்ளிகெட் சீல் வைத்து அலுவலக பதிவேட்டில் வைத்துள்ளதாக தெரிகிறது.ஒரு வருடத்திற்கு மேல் நடந்த இந்த கையாடல் அலுவலக ஆண்டு தணிக்கையின் போது சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. பணம் கையாடல் தொடர்பாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ரவீந்திரன்,  விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் பத்மகுமாருக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அரசு போக்குவரத்து தொழிலாளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : millions ,Ramanathpuram Amma ,bank , Ramanathapuram,Mama ,fraud
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...