சென்னை: அமமுக கட்சி பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளருமான வெற்றிவேல் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் 38 மக்களவை, 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்தில் ஆட்சியை தொடர பெரும்பான்மை எண்ணிக்கையான 118 சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை எட்ட முடியாது என்று உளவுத்துறை வாயிலாக முதல்வர் தெரிந்து கொண்டு, வாக்குகள் எண்ணும் நாள் அன்று வன்முறையை கட்டவிழ்த்து விட திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தெரிய வருகிறது.
அதனால் வாக்கு எண்ணப்படும் மையங்களில் எந்தவித அச்சமும் பயமும் இல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து மையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி மத்திய ரிசர்வ் படை மற்றும் துணை ராணுவ படை பாதுகாப்பை அதிகரித்து தக்க பாதுகாப்பு வழங்கி எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காத வகையில் உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.