×

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுகள் 23ம் தேதி நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும் என தகவல்

சென்னை: தமிழகத்தில் வருகிற மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே வெளியாகும் என்றும், சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும் எனவும் தகவல்கள் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 43 மையங்களில் மே 23ம் தேதி(வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதிவரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் வேலூர் தொகுதி தவிர 542 மக்களவை தொகுதிகளிலும், தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகளை என்னும் பணி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 43 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கும் நிலையில், அந்த மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 1 லட்சம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பதற்றமான மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் காலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையங்களில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் ஆகியோர் அமர்ந்து ஓட்டுக்களை எண்ணுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்களிடம் மின்னணு இயந்திரங்களை காட்டிய பின்னரே ஒட்டு என்னும் பணி நடைபெறும். காலை 9 மணி அளவில் முதல் சுற்று நிலவரம் தெரியவரும் என்றும், மதியம் 1 மணி அளவில் எந்த கட்சி பெரும்பான்மை வாக்குகளில் முன்னிலையில் உள்ளது என்பது தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் பணியும் நடைபெறும் என்பதால், 10% அளவுக்கு சரிபார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இறுதி முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 23ம் தேதி இரவுக்குள் ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவுகள் மே23ம் தேதி இரவு 8 மணிக்கு வெளியாகும் எனவும், மக்களவை தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு மேல் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 38 நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையுடன், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. இந்த முடிவுகளும் அன்றே தெரியவரும் என்பதால் தமிழகத்தில் அரசியல் நிலவரத்தில் என்ன மாறுதல் ஏற்படப்போகிறது என்று அன்றே தெரியவரும்.

Tags : election ,Lok Sabha ,Tamil Nadu , Lok Sabha polls, results, delays, information and vote count
× RELATED 2024 மக்களவைத் தேர்தல்.. அரசின்...