திருவனந்தபுரம்: கேரளாவில் வெயிலுக்கு 3 பேர் சுருண்டு விழுந்து பலியாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத வெயில் வாட்டி வதைத்து வருகிறது. திருவனந்தபுரம், பாலக்காடு, கண்ணூர் உள்பட பெரும்பாலான இடங்களில் வழக்கத்தை விட 4 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகமாக வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் ஒரே நாளில் வெயிலுக்கு 3 பேர் சுருண்டு விழுந்த பலியாகி உள்ளனர். கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்த நாராயணன் (67), திருவனந்தபுரம் அருகே பாறசாலையை சேர்ந்த கருணாகரன் (43), பத்தனம்திட்டாவை சேர்ந்த ஷாஜஹான் (55) ஆகியோர் வெயில் கொடுமை தாங்காமல் சுருண்டு விழுந்து இறந்தனர்.
இந்த மாதத்தில் மட்டும் 118 பேர் வெப்பத்தால் தோல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இன்று கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் காலை 11 முதல் 3 மணி வரை நேரடியாக வெயில் படும் வகையில் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என கேரள பேரிடர் தடுப்பு படையினர் எச்சரித்துள்ளனர். கேரளாவில் 104 டிகிரி பாரன்ஹீட் தான் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி உள்ளது. ஆனால் வெப்பத்தின் தாக்கம் 122 டிகிரிக்கு மேல் உணரப்படுகிறது. இதுதான் மரணத்துக்கு காரணமாக அமைகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி