வேலூர்: தமிழகத்தில் தொழில் வளம், விளைச்சல் அதிகரித்துள்ளது என தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம், தர்மபுரி தொகுதிகளில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று 2வது நாளாக வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய திருப்பத்தூருக்கு காரில் வந்தார். கிருஷ்ணகிரி-தர்மபுரி கூட்ரோட் அவுசிங் போர்டு பகுதியில் திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து திறந்த வேனில் அவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் திறமையில்லாத ஆட்சி அமைந்தால் நாடு செயல்படாது. நாட்டுக்கு நல்ல பிரதமர் தேவை. அதிமுக தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. மின்வெட்டு இல்லாமல் மின்மிகை மாநிலமாக மாற்றியது இந்த ஆட்சி. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அனைத்து மாநிலங்களில் ஆய்வு நடத்தியதில் தமிழகம் சட்டம், ஒழுங்கில் முதலிடத்தில் உள்ளது என்றார். நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் மூர்த்தி, ஆம்பூர் வேட்பாளர் ஜோதி ராமலிங்கராஜா ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, சில துரோகிகள் வெளியேறி உள்ளனர், துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார். தொடர்ந்து குடியாத்தம், கே.வி.குப்பம், ஆம்பூர், பேரணாம்பட்டு, உமராபாத், காட்பாடி, வேலூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து வருகிறார். இன்றிரவு வேலூரில் தங்கும் அவர், நாளை சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
‘இந்த ஊர் பெயர் என்ன?’
திருப்பத்தூரில் பிரசாரம் தொடங்கிய எடப்பாடி, மைக்கை பிடித்தவுடன், வேட்பாளரை திரும்பி பார்த்து, ‘இது எந்த ஊரு?’ எனக்கேட்டார். இது மைக்கில் அனைவருக்கும் கேட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி