×

புயல் தாக்கி 94 நாட்களுக்கு மேலாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத தென்னை விவசாயிகள்

சேதுபாவாசத்திரம்: கஜா புயல் கரையை கடந்து 94 நாட்களாக மேலாகியும் நிவாரணம் கிடைக்காததால் சேதுபாவாசத்திரம் பகுதியில் தென்னை விவசாயிகள் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளனர். வேரோடு சாய்ந்த தென்னைகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. கஜா புயல் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. புயலின் கோரத்தாண்டவத்தால் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் 20,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த தென்னை மரங்களை வேரோடு சாய்ந்தது. அதுமட்டுமின்றி பல ஆயிரம் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைந்தது. மேலும் விசைப்படகு, நாட்டுப்படகுகள் சுக்குநூறாக்கியது. மா, பலா, வாழை, தேக்கு என பல்வேறு வகையான காட்டுமரங்களையும் கஜா புயல் சூறையாடியது.

இதைதொடர்ந்து வேரோடு சாய்ந்த தென்னை ஒன்றுக்கு ரூ.1,100யை நிவாரணமாக தமிழக அரசு அறிவித்தது. டெல்டாவில் மட்டும் பாதிக்கப்பட்ட 7,500 தென்னை விவசாயிகளுக்கு ரூ.45 கோடி நிவாரணம் வழங்கப்பட்டதாக ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இன்னும் பேராவூரணி தாலுகாவில் மட்டும் 40 சதவீதம் தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அதேபோல் சேதமடைந்த கூரை மற்றும் ஓட்டு வீடுகளுக்கு 20 சதவீதம் பேருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. சேதுபாவாசத்திரம் வட்டாரத்தை பொருத்தவரை வருவாய் கிராமம் ஒன்றுக்கு 100 முதல் 200 பேர் வரை 1000 தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

எனவே மீண்டும் அவர்களிடத்தில் வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் நகல் பெறப்பட்டு 30 நாட்களுக்கு மேலாகிறது. ஆனால் இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. நிவாரணத்தை எதிர்பார்த்து பல்வேறு இடங்களில் 94 நாட்களுக்கு மேலாகியும் தென்னை மரங்களை அப்புறப்படுத்த வழியின்றி விவசாயிகள் உள்ளனர். தோப்புகளில் தென்னை மரங்களை அப்புறப்படுத்தினால் தான் புதிய தென்னங்கன்றுகள் நட முடியும். இதனால் நிவாரணத்தை எதிர்பார்த்து வேளாண்மைதுறை அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களுக்கும் 94 நாட்களாக தென்னை விவசாயிகள் அலைந்து வருகின்றனர். எனவே புயல் கரையை கடந்து 94 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் தென்னை விவசாயிகள் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coconut farmers ,storm attack , Gajah Storm, Coconut, Farmers
× RELATED திருச்சிற்றம்பலம் உழவர்...