பெங்களூரு : கர்நாடக பாஜ தலைவர் எடியூரப்பா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.கர்நாடக பேரவையில் கடந்த 8ம் தேதி முதல்வர் குமாரசாமி 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அன்று ஒரு ஆடியோவை முதல்வர் குமாரசாமி வெளியிட்டார். இந்த ஆடியோவில் மஜத எம்எல்ஏவை ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் பாஜவுக்கு இழுக்கும் முயற்சி குறித்து, சம்பந்தப்பட்ட எம்எல்ஏ.வின் மகனிடம் பாஜ மாநில தலைவர் எடியூரப்பா பேசிய பேரம் குறித்த உரையாடல் இடம்பெற்றிருந்தது. இந்த ஆடியோ வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த ஆடியோ பேச்சு குறித்து எஸ்.ஐ.டி. விசாரணைக்கு குமாரசாமி உத்தரவிட்டார். இதையடுத்து ஆடியோவில் மஜத எம்எல்ஏவிடம் குதிரைப் பேரம் பேசியதாக எடியூரப்பா மீது சிறப்பு புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், எம்.எல்.ஏ. நாகனகவுடாவின் மகன் சரணகவுடா தேவதுர்கா போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் சிவனகவுடா நாயக், பிரிதம்கவுடா மற்றும் மரங்கல் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்யலாம் என கருதிய எடியூரப்பா மற்றும் 3 பேர் முன்ஜாமீன் கோரி மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.மனு மீது விசாரணை நடத்திய சிறப்பு நீதிமன்றம், 4 பேரும் தலா ஒரு லட்சம் ரூபாய் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளின் பேரில் எடியூரப்பா, சிவனகவுடா நாயக், பிரிதம்கவுடா, மரங்கல் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கியது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி