ஊட்டி: நீலகிரியில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில் ஊட்டியில் நேற்று குறைந்தபட்ச தட்பவெப்பம் ஒரு டிகிரி செல்சியசாக பதிவானது. நீலகிரியில் இம்மாத துவக்கத்தில் இருந்து பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடும் உறைபனி காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருகியுள்ளன. பனியில் தேயிலை செடிகள் முற்றிலும் கருகாமல் இருக்க தென்னை ஓலைகள் மற்றும் தாவை செடிகளை கொண்டு மூடி வைக்கின்றனர். மேலும் மலை காய்கறிகளை பனியில் இருந்து காக்க காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்பிரிங்லர் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். எனினும், பெரும்பாலான பகுதிகளில் கேரட், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பனியால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் சேதமடையாத வகையில் காலையில் பாப் - அப் முறையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஊட்டியில் நேற்று உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 1 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியிருந்தது. தாழ்வான பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் ‘0’ டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி