தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பஞ்சலதுணை கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தமல்லையா(62). விவசாயியான இவர், தன்னுடைய விவசாய நிலத்தில் ராகி, நிலக்கடலை பயிரிட்டுள்ளார். தற்போது, மழை பெய்து வருவதால் நிலக்கடலை அறுவடை பருவத்தில் உள்ளது. வனப்பகுதியையொட்டிய கிராமம் என்பதால் இரவு நேரங்களில் விலங்குகள் நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. நிலக்கடலை பயிரை காட்டுப்பன்றி கூட்டத்திடமிருந்து காப்பாற்ற சித்தமல்லையா, நிலத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைத்துள்ளார். இரவு நேரத்தில் அருகில் உள்ள மின்கம்பத்தில் கொக்கி போட்டு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து கம்பிவேலியில் பாய்ச்சி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்ற என்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிவனப்பா(30), கெம்பன்(45) ஆகியோர் இரவில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர். நேற்று காலை சித்தமல்லையா தோட்டத்தில் இருவரும் சடலமாக கிடந்தனர். நேற்று காலை வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு சென்ற சித்தமல்லையா, இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு திருட்டு மின் இணைப்பை துண்டித்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான சித்தமல்லையாவை தேடி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி