கோவை: கோவையில் 3 மாத பெண் குழந்தைைய தாயே கொலை செய்து வீசிவிட்டு கடத்தல் நாடகம் ஆடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் மூன்று மாத பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் 3வது வீதியை சேர்ந்தவர் கார்த்திக்(32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரண்டாவது ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. முதல் குழந்தையை திண்டுக்கல் சிறுமலை பகுதியில் உள்ள தன் தாயின் வீட்டில் வனிதா விட்டுள்ளார். 2வது குழந்தையான கவிஸ்ரீ என்ற 3 மாத பெண் குழந்தையை தன்னுடன் வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வனிதா வீட்டில் குளித்து கொண்டு இருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கடத்தி சென்றதாக கார்த்திக்கிற்கு வனிதா தகவல் அளித்தார். இதனைதொடர்ந்து, வீட்டிற்கு வந்த கார்த்திக், மனைவி வனிதாவுடன் சென்று சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வனிதாவிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, வனிதா குழந்தையை தானே கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். ‘2வது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் குடும்பத்தினர் ஒதுக்கி வைத்தனர். 3 மாத குழந்தையான கவிஎப்போதும் அழுது கொண்டே இருந்ததால் கடும் மன உளைச்சல் அடைந்து குழந்தையை கொன்று, வீட்டின் பின்புறம் 100மீ தூரத்தில் தூக்கி வீசிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வனிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை தாயே கொன்று வீசி கடத்தல் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி