×

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவி தேர்வுகளுக்கான வயது வரம்பு அதிகரிப்பு : தமிழக அரசு உத்தரவு

சென்னை : துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவி தேர்வு எழுதுபவர்களுக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மாநில அரசில் உயர் பதவிகளான குரூப் 1ல் துணை கலெக்டர் (வருவாய்), போலீஸ் டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கம் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரி பதவியையும், குரூப் ‘1ஏ’ உதவி வன பாதுகாவலர், குரூப் ‘1பி’ இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளை எழுத்து தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.இந்த தேர்வை எழுதுபவர்களின் வயது உச்சவரம்பு மட்டும் அதிகரிக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால், நிறைய பேர் தேர்வு எழுத முடியாத நிலை இருந்து வந்தது. இதை பரிசீலித்த தமிழக அரசு தேர்வு எழுதுவோரின் வயது வரம்பை உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு ெவளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) தேர்வாணைய தேர்வுகளுக்கு உள்ள வயது உச்சவரம்பினை போல, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 1ஏ, குரூப் 1பி பணியிடங்களுக்கு தற்போதுள்ள எஸ்.சி., எஸ்.டி. எம்பிசி, பி.சி, டிஎன்சி பிரிவினர்களுக்கான வயது உச்சவரம்பை 35லிருந்து 37 ஆகவும், இதர பிரிவினருக்கு தற்போதுள்ள வயது உச்சவரம்பு 30லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்படுகிறது.குரூப் 1 தேர்வு எழுதி துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பியாக தேர்ந்தெடுக்கப்படுவோர், 7 ஆண்டுகளில் ஐஏஎஸ், ஐ.பி.எஸ். அந்தஸ்துக்கு உயர முடியும். இதனால், குரூப் 1 தேர்வுக்கு எப்போதும் மவுசு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 1ம் தேதி 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...