×

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினகரன் வெற்றியை எதிர்த்து ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மறைவை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கப் பிறகு, கடந்தாண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த தேர்தல் முடிவுகள் பரபரப்பாக பேசப்பட்டது.

குறிப்பாக பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரவி தொடர்ந்த வழக்கை எதிர்த்து தினகரனும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு வழங்கினார். டிடிவி தினகரன் மீதான வழக்கு தொடர முகாந்திரமில்லை என்று கூறி சுயேட்சை வேட்பாளர் ரவி தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...