×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதால் மூதாட்டி அலறல் டாக்டர் கன்னத்தில் உறவினர் பளார்

பெரம்பூர்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டபோது மூதாட்டி வலியில் அலறினார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர் டாக்டர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் பார்வதியம்மாள் (72). கடந்த வாரம் வயிற்று வலி காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், உள்நோயாளியாக மருத்துவமனையின் 5வது மாடியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், டாக்டர் ஒருவர் பார்வதியம்மாளுக்கு ஊசி போட்டபோது, அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர் அந்த டாக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் டாக்டரின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மற்றும் சக டாக்டர்கள் அந்த நபரை கண்டித்து நேற்று காலையில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ‘‘நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் எங்களுக்கே பாதுகாப்பு இல்லை. எனவே, டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கி டாக்டரை தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கண்டன கோஷம் எழுப்பினர். தகவலறிந்து ஸ்டான்லி மருத்துவமனை போலீசார் விரைந்து வந்து டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மருத்துவமனை டீன் மற்றும் அதிகாரிகள் வராததால் போராட்டத்தை கைவிட்டு, அவர்களாகவே கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மருத்துவமனை அதிகாரிகள் வந்ததும், இந்த பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என ஸ்டான்லி மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...