திருவனந்தபுரம்: நிபா வைரஸ் காய்ச்சல் பீதியால் கேரளாவில் பழங்கள் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சலால் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களிலும் இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். இதில் 2 பேர் நர்சுகள். தற்போது இந்த காய்ச்சல் அறிகுறியுடன் 15 பேர் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கேரள அரசின் சுகாதாரத்துறை, மத்திய சுகாதாரத் துறையினர், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோர், 2 மாவட்டங்களில் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
இதனால் வவ்வால் கடித்த பழங்களை யாரும் சாப்பிட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து கடந்த சில தினங்களாக கேரளாவில் பழங்கள் விற்பனை கடுமையாக குறைந்து வருகிறது. குறிப்பாக மா, கொய்யா, பப்பாளி போன்ற பழங்களை யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லை. இதனால் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பழங்கள் விற்பனை 50 சதவீத குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாம்பழம் கிலோ 30
தமிழ்நாடு, கர்நாடகா உள்பட மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு 90 சதவீத பழங்கள் கொண்டு வரப்படுகிறது. தினசரி 200க்கும் மேற்பட்ட லாரிகளில் இந்த பழங்கள் வந்து சேர்கிறது. நேற்று 120 லாரிகளில் மட்டுமே பழங்கள் கேரளாவுக்கு வந்துள்ளது. தற்போது மாம்பழ சீசன் என்பதால் சில மாம்பழ வகைகள் 100க்கு மேல் விற்பனையாகும். ஆனால் நிபா காய்ச்சல் காரணமாக விலை 30 ஆக குறைந்துள்ளது.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!