விழுப்புரம் : தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ20 முதல் ரூ22 ஆயிரம் கோடி வரையில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இதனால், அரசின் வருவாயை பெருக்கும் நோக்குடனும், குடிமகன்களின் வசதிக்காகவும் அவ்வப்போது டாஸ்மாக் நிர்வாகத்தில் புதுபுது திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தற்போது 500 எம்.எல் அளவிலான ‘டின் பீர்’ஐ டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக 3 கம்பெனிகள் டின்பீர்களை தயார் செய்து சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் மட்டும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் இந்த டின்பீர் விற்பனை தொடங்கியுள்ளது. விழுப்புரம் நகரிலுள்ள ஜானகிபுரம் டாஸ்மாக் கடைகளில் இந்த டின்பீர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப விலை ரூ110 மற்றும் ரூ120 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, டாஸ்மாக் கடைகளில் உள்ள பீர் பாட்டில்கள் 650 எம்.எல் அளவிலானது ரூ120 முதல் ஆரம்ப விலையாக இருக்கிறது. இந்த பீர்கள் சிறிய அளவிலான டின்களில் கிடைப்பதால் பாட்டில்களில் உள்ள பீரின் விலையை விட விலை அதிகமாக உள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் இந்த டின் பீரின் ஆரம்ப விலை 500 எம்.எல் ரூ65 முதல் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு உள்ளது. ஏற்கனவே கோடையில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகமாக உள்ளது. தற்போது டின்பீர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் குடிமகன்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!