×

திட்டமிட்டு நடந்தது அல்ல துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

சென்னை: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:   இன்று (நேற்று) காலை 11 மணிக்கு சட்டப் பேரவைத் தலைவர் அறையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது. அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் ஒருசில நிமிடம் அங்கே அமர்ந்துவிட்டு வெளியில் சென்று விட்டார். அந்த அலுவல் ஆய்வுக் கூட்ட ஆலோசனை மேற்கொண்டிருந்தபொழுது தொலைக்காட்சியில், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வரை பார்க்க சென்றதாகவும், முதல்வர் மறுத்ததாகவும் ஒரு செய்தி வந்தது.

எனக்கு எதிரில்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவரும் அமர்ந்திருந்தனர்,  உங்களிடத்திலே மனு கொடுக்க வந்திருக்கிறேன் என்று கூறி அதை அங்கேயே கூட கொடுத்திருக்கலாம்.  அப்படி இல்லாவிட்டாலும் கூட, உங்கள் அறைக்கு வருகிறோம், நாங்கள் ஒரு மனு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தால், நான் என்னுடைய அறைக்கு வந்து அவருடைய மனுவை பெற்றிருப்பேன்.   ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு, அரசியலில் ஒரு நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்பதற்காக, நான் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்ற அந்த நேரத்தில், முதல்வர் அறைக்கு வந்து, அங்கே அமர்ந்து கொண்டு, நான் சந்திக்க மறுப்பதாக ஊடகங்களுக்கு ஒரு உண்மைக்கு மாறான தகவலை அளித்துள்ளார்.

ஜெயலலிதா ஆட்சி காலத்திலே 3.3.2013 அன்று ஸ்டெர்லைட் ஆலை அருகில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது.  அதன் அடிப்படையில், 29.3.2013 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டித்தார். அதோடு ஆலையின் உரிமத்தையும் ரத்து செய்தார். அதை எதிர்த்து, அந்த நிர்வாகம் 31.5.2013 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதியை பெற்றார்கள். 8.8.2013 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் சில நிபந்தனைகளை விதித்து அந்த ஆலையை துவக்கிக் கொள்ளலாம் என்று ஒரு தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது.  9.4.2018 அன்று, ஆலையை தொடர்ந்து இயக்க ஆலை நிர்வாகம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பம் செய்தது. அதை நாங்கள் நிராகரித்து விட்டோம். மாசு கட்டுப்பாடு வாரியத்தினுடைய உத்தரவின்பேரில் தமிழக மின்சார வாரியம் ஆலைக்கு வழங்கக்கூடிய மின் இணைப்பை இன்று துண்டித்து விட்டது. பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள். அப்படி நடத்துகின்ற பொழுதெல்லாம் அமைதி காத்து, அறவழியிலே போராட்டம் நடத்தினார்கள்.

ஆனால், இந்த முறை சில எதிர்க்கட்சிகளின் துண்டுதலின்பேரில், சில சமூக விரோதிகள் ஊடுருவி, அப்பாவி மக்களை பயன்படுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலே இந்த போராட்டத்தை இன்றைக்கு ஒரு மோசமான சூழ்நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.   இன்றையதினம் உயிரிழந்த அத்தனை பேருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், மிகுந்த வேதனையும், துயரமும் நாங்கள் அடைந்துள்ளோம். ஏனென்று சொன்னால் அரசால் இவ்வளவு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது.

 இந்த ஸ்டெர்லைட் ஆலையைப் பொறுத்தவரைக்கும் அதை மூடுவதற்குண்டான நடவடிக்கையை  சட்டத்தின் வாயிலாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அன்றையதினம் நடைபெற்ற சம்பவம் ஒரு விரும்பத்தகாத சம்பவம். அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. அந்த தடை உத்தரவில், ஒரு பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது. அதற்காகவே இந்த தடை உத்தரவு. ஆனால், சில விஷமிகளும், சில அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பயன்படுத்தி அத்தகைய சூழ்நிலைக்கு தள்ளியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு: எதிர்க்கட்சித் தலைவர், முதல்வரோ, துணை முதல்வரோ நேரில் செல்லவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளாரே?  அது தவறான குற்றச்சாட்டு. நேற்றைய தினம் கூட மு.க.ஸ்டாலின் போய் சந்தித்து வந்திருக்கிறார். 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. முதலிலே சட்டத்தை மதிக்க வேண்டும். அங்கே அமைதி நிலவ வேண்டும். இயல்பு நிலை திரும்ப வேண்டும். பொதுமக்கள் அச்சமில்லாமல் வாழவேண்டும். பொதுச் சொத்துக்கு எவ்வித சேதமும் விளைவிக்கக்கூடாது என்பதற்காகத்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

 துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அவசியம் என்ன, அதற்கான காரணம் என்ன? சில அரசியல் கட்சித் தலைவர்கள், சில சமூக விரோதிகள் இதில் ஊடுருவி, அரசுக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த  சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். ஆகவே, ஊர்வலம் வந்தவர்கள்அங்கே இருக்கின்ற காவல் துறையினரை தாக்கிய பிறகு, அவர்கள் முதலிலே கண்ணீர் புகையை வீசினார்கள், பிறகு தடியடி பிரயோகம் செய்தார்கள், பிறகு அதையும் மீறி அங்கே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்கின்ற வாகனத்திற்கு தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையினுடைய ஊழியர் குடியிருப்புக்குள் புகுந்து அங்கே இருக்கின்ற வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு, அங்கே உள்ளே நுழைய முற்படுகின்றார்கள். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முற்படுகின்றார்கள். இதையெல்லாம் உங்களுடைய தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் நாங்களும் தெரிந்து கொண்டோம். ஒருவர் உங்களை தாக்கும் போது தடுக்கதான் முற்படுவீர்கள். அது இயற்கை. அதுபோன்று தான் துப்பாக்கி சூடு சம்பவமும் நடைபெற்றது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் கிடையாது.

 ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை?  இப்படியெல்லாம் ஒரு கலவரம் நடைபெறும் என்று தெரிந்திருந்தால் முன்னெச்சரிக்கையாகவே கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் போராட்டம் நடைபெறுகின்ற பொழுது, அங்கே இருக்கின்றவர்கள், அவர்களது உணர்வை பிரதிபலிக்கின்றவிதமாக அமைதியாக அந்த ஊர்வலத்திற்கு செல்வார்கள். பின்னர் அங்கே உள்ள கலெக்டரிடம் தங்கள் குறைகளை சொல்லி பரிகாரம் பெற முற்படுவார்கள். அரசுக்கு தெரியப்படுத்தி அவர்கள் குறைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் சொன்ன மாதிரி, சில அரசியல் கட்சித் தலைவர்களும், சில சமூக விரோதிகளும் ஊடுருவி இதை ஒரு தவறான பாதையில் அழைத்துச் சென்ற காரணத்தினால்தான் இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டது.  இவ்வாறு அவர் கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...