×

10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகிறது: 28ம் தேதி மதிப்பெண் பட்டியல்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக இணைய தளத்தில் நாளை காலை வெளியாகிறது. செல்போன் மூலம் மாணவர்களுக்கு முடிவுகள் கிடைக்கும். 28ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வை கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை எழுதினர். தேர்வு முடிவு ஏற்கெனவே அறிவித்தபடி நாளை வெளியாகிறது. நாளை காலை 9.30 மணிக்கு இணைய தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும். மாணவ மாணவியர் தங்களின் பதிவெண், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை பதிவு செய்து இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். இது தவிர தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 5 நிமிடத்தில் மாணவர்களின் செல்போனுக்கும் முடிவுகள் வரும்.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அந்தந்த மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கு அவர்களின் செல்போன் எண்ணுக்கு முடிவுகள் வரும். தற்காலிக மதிப்பெண் பட்டியல்: பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு 28ம் தேதி பிற்பகல் நேரில் சென்று தற்காலிக மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் இருந்தும் தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டல்: மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம்: பகுதி 1 மொழிப்பாடம் ரூ.305, பகுதி 2 ஆங்கிலம் ரூ.305, கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு ரூ.205, விருப்ப மொழிப்பாடம் ரூ.205 என கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும். சிறப்பு துணைத் தேர்வு: பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்காக ஜூலை 28ம் தேதி சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...