மதுரை : வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தஞ்சாவூரில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெயக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.