
மும்பை: இந்திய எல்லை பாதுகாப்பு படை அழைப்பின் பேரில், காஷ்மீரில் இருக்கும் எல்லை பகுதிக்கு அக்ஷய் குமார் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, குரேஸ் பள்ளத்தாக்கின் நெரோ துலைல் கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள அரசு பள்ளி மாணவர்களுடன் அவர் கலந்துரையாடிய போது, அவர்களின் கல்வி தேவைகளையும், பள்ளியின் நிலையையும் பார்த்துவிட்டு, உடனடியாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்.
அதன்படி அவர் அளித்த நிதியை கொண்டு, அந்த பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி இருக்கின்றனர். புதிய வகுப்பறைகள், கணினி ஆய்வகம், நூலகம், ஆசிரியர்களுக்கான அலுவலக அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளது. அக் ஷய் குமார் தனது மறைந்த தந்தை ஹரி ஓம் பாட்டியாவின் நினைவாக, இந்த புதிய பள்ளி கட்டிடத்துக்கு ‘ஹரி ஓம் பாட்டியா கல்வி வளாகம்’ என்று பெயர் சூட்டியுள்ளார். அக்ஷய் குமாரின் இச்செயலை சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

