சென்னை: கலைமாமணி விருது பெற்ற மதுரை ஆர். முரளிதரன் வழங்கும் ‘மருதிருவர் – எ டான்ஸ் மியூசிக்கல்’ மேடை நிகழ்ச்சி, இயல், இசை, நடனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மருது சகோதரர்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள நாடகம். முரளிதரன் கூறும்போது, ‘உலக வரலாற்றில் முதல் முறையாக மருது சகோதரர்களின் கதையை இயல்இசைநடன வடிவமாக மேடையேற்ற உள்ளேன்” என்றார்.
இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது, ‘‘மேடையில் முரளிதரன் டூயல் ரோலை நிகழ்த்திய விதம் அபாரம். சினிமாவிலேயே டூயல் ரோல் எடுப்பது கடினம். ‘கைதியின் டைரி’ கதையை எழுதினேன். ஆனால் அதை அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் எடுக்கும்போது நான் மாட்டிக்கொண்டேன். டூயல் ரோல் ஷூட்டிங் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன்.
பின்னர் அமிதாப் சொன்னபடியே மாஸ்க் ஷாட்டை எடுத்தேன். அதை என் குரு பாரதிராஜா பாராட்டினார். எம்.ஜி.ஆரும் பாராட்டினார். அத்தனை சிரமமான விஷயத்தை முரளிதரன் மேடை நாடகத்தில் செய்திருக்கிறார் என்பதே ஆச்சரியம்’’ என்றார். இந்த நாடகம் பிப்ரவரி 7ம் தேதி, சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது.

