
இசைஞானி இளையராஜா, கோடம்பாக்கத்தில் உள்ள தனது புதிய இசைப்பதிவு கூடத்தில் வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு சென்னை, கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டுடியோவை தொடங்கி அங்கு 5 ஆண்டுகளை கடந்துள்ள இளையராஜா இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி லண்டனில் உள்ள ராயல் ஸ்காட்டிஷ் அரங்கில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார் இளையராஜா. அதற்கு முன்னதாக 1993ம் ஆண்டில் ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா மூலம் ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனி அமைத்த பெருமை இவருக்கு உண்டு.
தற்போது 2வது சிம்பொனி வேலைகளை தொடங்கி இருக்கிறார். இதுகுறித்து தனது சோஷியல் மீடியாவில், ‘‘புதிய ஸ்டூடியோவிற்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது, சிம்பொனி இசையின் 2வது அரங்கேற்றத்தின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது’’ என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார். 80 வயதை கடந்தும் குறையாத ஆர்வத்துடன் அவர் படைக்கும் இந்த இசைக்கோர்வை, நவீன தொழில்நுட்பமும் ஆன்மீக தேடலும் கலந்த ஒரு கலைப்படைப்பாக இருக்கும் என இசை விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

