எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என அந்தக்கால முன்னணி ஹீரோக் களுடன் ஜோடிபோட்டு நடித்தவர் சாவித்ரி. இவரது வாழ்க்கை வரலாறு, ‘நடிகையர் திலகம்’ பெயரில் தமிழில், ‘மகாநதி’ பெயரில் தெலுங்கிலும் கடந்த ஆண்டு வெளியானது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதுடன் கீர்த்தி சுரேஷுக்கும் அடுத்த கட்டத்துக்கு செல்ல உதவியது.
சாவித்ரி காலத்தில் ஹீரோயினாக நடித்து வந்தவர் வாணிஸ்ரீ. சிவாஜியுடன் வசந்தமாளிகை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர். தற்போது தெலுங்கு படங்களில் அம்மா வேடங்களில் நடிக்கிறார். சாவித்ரி வாழ்க்கை வரலாறு படம்பற்றி தற்போது தனது கருத்தை வெளியிட்டுள்ளார் வாணிஸ்ரீ. அப்படம் பார்க்கும்போது தூங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வாணிஸ்ரீ கூறும்போது,’சாவித்ரி வாழ்க்கை சரித்திர படத்தை பார்த்தேன் ஆனால் முதல்பாதி படம் பார்த்தபிறகு தூங்கி விட்டேன். படத்தின் 2ம்பாதியில் சாவித்ரியின் வாழ்க்கை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கை சரித்திர படம்பற்றி கேட்கிறார்கள். அது நடக்காது, காரணம் சினிமா என்றால் திருப்பங்கள் வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் அப்படி எந்த திருப்பமும் நடக்கவில்லை’ என்றார்.